பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கலபுரகி பகுதியில் உள்ள மேலகுண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். கடந்த வியாழக்கிழமை சங்கரின் 18 வயது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது. இதையடுத்து சங்கரின் குடும்பத்தினர் அந்த பெண்ணுக்கு இறுதிச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர்.
இந்நிலையில், இது குறித்து மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கரின் வீட்டிற்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது சங்கர் தனது மகளை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். சங்கரின் மகள் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் சங்கருக்கு தெரியவந்த நிலையில், காதலை கைவிடுமாறு தனது மகளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அந்த பெண் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். சங்கருக்கு மொத்தம் 5 மகள்கள் உள்ள நிலையில், வேறு சாதியை சேர்ந்த ஆணை தனது மகள் காதலிப்பது ஊராருக்கு தெரியவந்தால், மற்ற மகள்களின் திருமணம் பாதிக்கப்படும் என்று பயந்துள்ளார். இறுதியில் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சங்கர், அவரது வாயில் விஷத்தை ஊற்றி, மகள் தற்கொலை செய்து கொண்டதாக ஊர் மக்களிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி ஊர் மக்கள் சங்கரின் மகளுக்கு இறுதிச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்த நிலையில், போலீசார் சங்கர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் சங்கரின் உறவினர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.