புதுடெல்லி: இந்தியா – சிங்கப்பூர் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இந்தியா வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று அவர் 3-நாள் அரசு முறைப் பயணமாக, நேற்று இந்தியா வந்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, லாரன்ஸ் வாங் நேற்று சந்தித்து பேசினார். அவர் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார். அப்போது பசுமை எரிசக்தி, கப்பல் கட்டுதல், சிவில் விமான போக்குவரத்து மற்றும் விண்வெளி உட்பட பல துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்றபின், லாரன்ஸ் வாங் இந்தியா வருவது இதுவே முதல் முறை. அவருடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் சியாவ் ஹாங், நிதித்துறை அமைச்சர் ஜெப்ரி சியாவ் மற்றும் அதிகாரிகள் இந்தியா வந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் கட்டப்பட்டுள்ள கன்டெய்னர் முனையத்தில் சிங்கப்பூர் ரூ.8,800 கோடி முதலீடு செய்துள்ளது. இதை இரு நாட்டு பிரதமர்களும் காணொலி மூலம் தொடங்கி வைக்கின்றனர். இருதரப்பு வர்த்தக உறவுகளை பல துறைகளில் வலுப்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்கும் ஆலோசனை நடத்த உள்ளனர்.