ஜம்மு காஷ்மீரில் 2வது நாளாக துப்பாக்கிச் சூடு: 2 வீரர்கள் உயிரிழப்பு, 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

குல்காம்: ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் 2வது நாளாக நடத்திய துப்பாக்கிச் சண்டையில், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குல்காமின் குடார் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

இரு தரப்புக்குமான கடுமையான மோதல் இரண்டாவது நாளாக இன்றும் நீடித்த நிலையில், பாகிஸ்தானியர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் உட்பட இரண்டு பயங்கரவாதிகளும், இரண்டு வீரர்களும் உயிரிழந்தனர். இந்த மோதலில் ஒரு ராணுவ மேஜர் காயமடைந்தார்.

இந்த மோதலின் போது, ​​சப் பெர்பத் கவுர் மற்றும் லான்ஸ் நாயக் நரேந்தர் சிந்து எனும் இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு ராணுவ மேஜர் ஆகியோர் காயமடைந்தனர். இதில் கவுர் மற்றும் சிந்து ஆகியோர் உயிரிழந்த நிலையில், ராணுவ மேஜரின் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

முதல்கட்ட தகவல்களின்படி, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் உள்ளூர்வாசி என்றும், இரண்டாவது நபர் ‘ரெஹ்மான் பாய்’ என்ற பெயரைக் கொண்ட பாகிஸ்தான் தீவிரவாதி என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

குடாரில் என்கவுன்டர் நடந்த இடத்தை காவல்துறை தலைமை இயக்குநர் நளின் பிரபாத் இன்று பார்வையிட்டார். அங்கு ராணுவத்தின் தலைமையிலான கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையை அவர் பாராட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.