சார்லி கிர்க் – அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிக நெருங்கிய நண்பர்களின் ஒருவரான இவர், நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
‘அமெரிக்கன் கம்பேக் டூர்’ (American Comeback Tour) என்ற பெயரில், சார்லி கிரிக் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில், ‘இடதுசாரிகளுக்கு எதிரான கொள்கைகள்’ குறித்து பேசி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில், நேற்று சார்லி கிரிக் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, ‘கடந்த 10 ஆண்டுகளில், எத்தனை மூன்றாம் பாலின அமெரிக்கர்கள் வெகுஜன கொலையாளிகளாக (துப்பாக்கி சூட்டு நடத்துபவர்களாக) இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?’ என்று பேசிக்கொண்டிருக்கும்போது, இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

யார் இந்த சார்லி கிர்க்?
சார்லி கிர்க்கின் இந்தக் கொலை அமெரிக்காவில் மிகுந்த பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்குக் காரணம், இவர் ட்ரம்பின் நெருங்கிய நண்பர் ஆவார்.
31 வயதே ஆகும் இவர், கடந்த அதிபர் தேர்தலில், ட்ரம்ப் இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.
வலதுசாரி கொள்கைகளைக் கொண்ட இவருக்கு, அமெரிக்க இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. இதையொட்டி, இவர் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, இளைஞர்களிடையே ட்ரம்பிற்காக வாக்குகளைச் சேகரித்தார்.
விமர்சனங்கள்
இவரை சுற்றி பல பல விமர்சனங்களும் உண்டு. முன்னர், ‘கரியருக்கு முக்கியத்துவம் செலுத்துவதை விட, குழந்தைகளைப் பெற்றுகொள்ளுங்கள்’ என்று சார்லி கிர்க் கூறியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
2023-ம் ஆண்டு, நிகழ்ச்சி ஒன்றில், “வாகனம் ஓட்டுவதால், விபத்தில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 மக்கள் இறக்கிறார்கள். இது ஒரு விலை.
இந்த விபத்துகளைத் தடுக்க வேண்டுமானால், நாம் யாரும் வாகனம் ஓட்டக்கூடாது. ஆனால், வேகம், பயணம் போன்ற காரணங்களுக்காக, நாம் தொடர்ந்து வாகனங்களை இயக்கி வருகிறோம். இதனால், அந்த 50,000 உயிர்கள் போவது ஒரு விலை தான்.
அதே மாதிரி, குடிமக்களுக்கு துப்பாக்கி வைப்பதற்கான சுதந்திரத்தைக் கொடுக்கும்போது, ஒரு சில துப்பாக்கி மரணங்கள் நடக்கத்தான் செய்யும். அது அதற்கான விலை” என்று குடிமக்களுக்கு துப்பாக்கி தர வேண்டும். அதற்காக அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்.

ட்ரம்ப் பதிவு
சார்லி கிர்க்கின் மரணத்திற்கு, ட்ரம்ப் “மாபெரும், புகழ்பெற்ற, சார்லி கிர்க் இறந்துவிட்டார். அமெரிக்காவின் இளைஞர்களின் இதயத்தை சார்லியைப் போல் யாரும் புரிந்துகொண்டதில்லை. அவர் அனைவராலும், குறிப்பாக என்னால், நேசிக்கப்பட்டார் மற்றும் போற்றப்பட்டார். இப்போது அவர் நம்மிடையே இல்லை. என்னுடைய மற்றும் மெலனியாவின் அனுதாபங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.