மணிப்பூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி

இம்பால்,

மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை பரவி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில் பிரதமர் மோடி, கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இன்று மணிப்பூர் சென்றுள்ளார். முன்னதாக மிசோரம் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து மணிப்பூருக்கு சென்றார்.

இம்பால் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லா மற்றும் தலைமைச் செயலாளர் புனீத் குமார் கோயல் ஆகியோர் வரவேற்றனர். சுராசந்த்பூரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், ரூ.8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, மாநில தலைநகர் இம்பால் மற்றும் சுராச்சந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் பேரணிகள் நடைபெறும் இடங்களான இம்பாலில் உள்ள 237 ஏக்கர் பரப்பளவு கொண்ட காங்லா கோட்டை மற்றும் சுராசந்த்பூரில் உள்ள மைதானம் ஆகிய இடங்களில் மாநில மற்றும் மத்தியப் படைகளின் வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுராசந்த்பூரில் ரூ.7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். அதே போல், இம்பாலில் ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மோடி தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.