காசாவில் மீண்டும் தரைவழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

ஜெருசலேம்,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் கிளர்ச்சியாளர்களை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் என அறிவித்து பணய கைதிகள் பரிமாற்றத்துக்குப் பின்பும் போரை நீட்டித்து வருகிறது இஸ்ரேல். இருந்தபோதிலும் தரைவழியாக தீவிரமாக தாக்காமல், சந்தேக நபர்கள் உள்ள இடங்களை மட்டும் வான்வழியாக தாக்கி வந்தது.

இந்த நிலையில் காசாவில் நேற்று முதல் மீண்டும் தரைவழி தாக்குதலையும் தொடங்கி உள்ளது இஸ்ரேல். அங்கு ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் போரில் தொகுதி தொகுதியாக பல இடங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மீண்டும் தரைவழி போர் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் உடமைகளுடன் காசாவை விட்டு வெளியேற ஆரம்பித்து உள்ளனர். இருந்தபோதிலும் லட்சக்கணக்கானவர்கள் இன்னும் அங்கு உள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் போர் நிறுத்தத்துக்கு தீவிரம் காட்டி வரும் நிலையில் இஸ்ரேலின் இந்த தாக்குதல், போரை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்றும், இது சுமூக முடிவை எட்ட முடியாத நிலைக்கு தள்ளக்கூடும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதற்கிடையே “காசா எரிந்து கொண்டிருக்கிறது, இரவு முழுவதும் காலைவரை கடுமையான குண்டுவீச்சுகள் நகரை தாக்கியது” என்று இஸ்ரேலிய ராணுவ மந்திரி இஸ்ரேல் காட்ஸ் கூறி உள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.