காபூல்,
கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் ஆட்சி அமைத்தனர். அது முதலே அங்கு பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. அங்கு பெண்கள் வெளியே செல்லவும், கல்வி கற்கவும் பணிபுரியவும் கடும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
இந்தநிலையில் அங்கு பெண் உரிமை, பாலினம் உள்ளிட்டவை குறித்து பெண்கள் எழுதிய புத்தகங்கள், பல்கலைக்கழக பாடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன. அங்குள்ள புதிய கல்விச்சட்டத்தின்படி தலிபான்கள் கொள்கைகள் மற்றும் ஷரியா சட்டத்திற்கு எதிராக இருப்பதால் பெண்கள் எழுதிய 140 புத்தகங்கள், ஈரானிய எழுத்தாளர்களின் 310 புத்தகங்கள் என 680 புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஷரியா சட்டத்துடன் முரண்படுவதாகக்கூறி ஆப்கானிஸ்தான் பல்கலை. பாடங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சுமார் 6 மாகாணங்களில் பைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தலிபான் அரசு சமீபத்தில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.