‘20 ரூபாய்க்கு 6 பானிபூரிகள் வேண்டும்..’ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண் – திகைத்த போலீஸ்

காந்திநகர்,

இந்தியாவில் பொதுவாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் தங்கள் அடிப்படை தேவைகள், உரிமைகளை அரசாங்கத்திடம் இருந்து கேட்டுப் பெறுவதற்காக சாலைகளில் அமர்ந்து தர்ணா போராட்டங்களை நடத்துகின்றனர். சாலை போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் தர்ணா போராட்டங்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வர காவல்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சுர்சாகர் பகுதியில் பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து தீடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவரிடம் போராட்டத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கூறிய காரணத்தைக் கேட்டு, போலீஸ்காரர்கள் உள்பட அங்கிருந்த அனைவரும் திகைத்தனர்.

அந்த பெண் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று பானிபூரி வாங்கியுள்ளார். கடைக்காரர் அந்த பெண்ணிடம் 20 ரூபாய் வாங்கிக் கொண்டு 4 பானிபூரிகளை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண் தனக்கு 6 பானிபூரிகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் கடைக்காரருக்கும், அந்த பெண்ணுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண் நேராக சாலைக்கு நடுவே சென்று தரையில் உட்கார்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

அதுமட்டுமின்றி, போலீசாரிடம் தனக்கு வந்து சேர வேண்டிய 2 பானிபூரிகளை பெற்றுத் தர வேண்டும் என்று அந்த பெண் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். மேலும், தன்னை ஏமாற்றிய கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த கோரிக்கையை கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய போலீசார், அழுது கொண்டிருந்த பெண்ணை சமாதானம் செய்ய முயன்றனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின் ஒருவழியாக அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.