புதுடெல்லி,
இந்திய தபால் துறை அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை நேற்று (ஆகஸ்ட் 25) முதல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதற்கு காரணம், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததற்கு எதிர்ப்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்பு 800 டாலர் வரை மதிப்புள்ள அஞ்சல் பொருட்களுக்கு வரி விலக்கு இருந்த நிலையில், இப்போது 100 டாலருக்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களின் முன்பதிவுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.இருப்பினும், 100 டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்கு வரி விலக்கு தொடர்கிறது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனடாவில் தபால் சேவை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தபால் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கனடிய தபால் திணைக்களத்தின் தொழிற்சங்கமான CUPW (Canadian Union of Postal Workers) தொடங்கிய நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால், தபால்கள் மற்றும் பொதிகள் கையாளப்படுவது அல்லது விநியோகிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும், சில தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் Canada Post அறிவித்துள்ளது. வேலைநிறுத்தத்திற்கு முக்கிய காரணமாக சம்பள உயர்வு மற்றும் பிற சலுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சொல்லப்படுகிறது.