வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அக்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அக்.3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா – சத்தீஸ்கர் பகுதிகளில் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (செப்.28) முதல் அக்.3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணையில் தலா 8 செ.மீ, திற்பரப்பில் 7 செ.மீ, சிற்றாறு, சுருளக்கோடு, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, கோவை மாவட்டம் சின்கோனா, வால்பாறையில் தலா 6 செ.மீ, சோலையார், சின்னக்கல்லார், கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போர்விளை, குழித்துறை, தேனி மாவட்டம் பெரியாறில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.