நாடு முழுவதும் 97,500 செல்போன் டவர்களுடன் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்கினார் பிரதமர் மோடி

ஜார்சுகுடா: பாரத் சஞ்​சார் நிகம் நிறு​வனத்​தின் (பிஎஸ்​என்​எல்) சுதேசி 4ஜி சேவையை ஒடி​சா​வின் ஜார்​சுகடா நகரில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்​கி​வைத்​தார். இத்​துடன் 97,500 செல்​போன் டவர்​களும் திறக்​கப்​பட்​டன.

பிஎஸ்​என்​எல் நிறு​வனத்​துக்கு இது வெள்ளி விழா ஆண்​டாகும். இந்​நிலை​யில், பிஎஸ்​என்​எல் நிறு​வனத்​தின் சுதேசி 4ஜி சேவையை, ஒடி​சா​வின் ஜார்​சுகுடா நகரில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி தொடங்​கி​வைத்​தார்.

மேலும், 97,500 செல்​போன் கோபுரங்​களை​யும் பிரதமர் மோடி தொடங்​கி​வைத்​தார். இதில் 92,600 கோபுரங்​கள் 4ஜி தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி இயங்​கக் கூடிய​வை​யாகும். இந்த செல்​போன் கோபுரங்​கள் ரூ.37,000 கோடி செல​வில் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த செல்​போன் கோபுரங்​கள் ஒடி​சா, ஆந்​தி​ரா, உத்​தரப் பிரதேசம், மகா​ராஷ்டி​ரா, ராஜஸ்​தான், அசாம், குஜ​ராத் மற்​றும் பிஹார் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் அமைக்​கப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் 7,545 4ஜி கோபுரங்​கள் உள்​ளன.

சென்​னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் 19 கிராமங்​களில் உள்ள செல்​போன் கோபுரங்​கள் 4ஜி-​யாக தரம் உயர்த்​தப்​படு​கின்​றன. சேலம், கடலூர், வேலூர், மதுரை, ஈரோடு மாவட்​டங்​களி​லும் அதிக அளவி​லான கிராமங்​களில் 4ஜி சேவை வழங்​கப்​படும்.

இந்த செல்​போன் கோபுரங்​கள் அனைத்​தும் இந்​திய தொழில்​நுட்​பத்தை அடிப்​படை​யாகக் கொண்டு செயல்​படும். தொலைத் தொடர்​புத் துறை​யில் சீனா, டென்​மார்க், ஸ்வீடன், தென்​கொரியா போன்ற சில நாடு​கள் மட்​டுமே உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​துகின்​றன. அந்த வரிசை​யில் தற்​போது இந்​தி​யா​வும் இணைந்​துள்​ளது.

இது தொடர்​பாக பிஎஸ்​என்​எல் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: 4ஜி சேவை மூலம் ஒடி​சா​வில் 2,472 கிராமங்​கள் உட்​பட, முன்பு தொலைத் தொடர்பு சேவை கிடைக்​காத 26,700 கிராமங்​கள் இணைக்​கப்​படும். இவற்​றில் பல மிக​வும் தொலை​தூரக் கிராமங்​கள் மற்​றும் தீவிர​வாத பாதிப்பு உள்ள பகு​தி​களாகும்.

இந்த விரி​வாக்​கம் மூலம் பின்​தங்​கிய மக்​களும் டிஜிட்​டல் சேவை மற்​றும் தகவல் தொடர்பை பெற முடி​யும். இதன் மூலம் 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட புதிய சந்​தா​தா​ரர்​களுக்கு தொலைத் தொடர்பு சேவை அளிக்​கப்​படும்.

இதில் முக்​கிய அம்​சம் என்​னவென்​றால், சூரிய மின்​சக்​தி​யில் இயங்​கும் செல்​போன் கோபுரங்​கள் அறி​முகம் செய்​யப்​படு​கின்​றன. இதன் மூலம் 4ஜி கோபுரங்​களுக்கு தடை​யில்லா மின்​சா​ரம் கிடைக்​கும். இது நாட்​டில் மிகப் பெரிய பசுமை தொலைத் தொடர்பு தொகுப்​பு​களை உரு​வாக்​கும்.

சுதேசி 4ஜி சேவை​யுடன், டிஜிட்​டல் பாரத் நிதி திட்​டத்​தை​யும் பிரதமர் மோடி தொங்கி வைத்​துள்​ளார். இந்த திட்​டம் மூலம் சுமார் 30,000 கிராமங்​களில் 100 சதவீதம் 4ஜி சேவை செயல்​படுத்​தப்​படும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவி​க்​கப்​பட்​டுள்ளது.

பிஎஸ்என்எல் புதிய அவதாரம்: பிஎஸ்என்எல் சுதேசி 4ஜி சேவை தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சியில் ஒடிசா முக்கியப் பங்காற்றும். ஒடிசாவில் இயற்கை வளங்கள் அதிகம். ஆனாலும், ஒடிசா பல ஆண்டுகாலமாக சிரமத்துக்குளாகி வந்தது. ஆனால், வரும் பத்தாண்டுகளில் ஒடிசா செழிப்படையும். இது ஒடிசாவுக்கு மிக முக்கியமான காலமாகும்.

ஒடிசாவில் 2 செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. செமி கண்டக்டர் பூங்காவும் ஒடிசாவில் அமைக்கப்படும். ஒடிசா இரட்டை இன்ஜின் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கிறது. பல கோடி மதிப்பிலான திட்டங்கள் ஒடிசாவில் தொடங்கியுள்ளன.

தற்போது பிஎஸ்என்எல் புதிய அவதாரம் எடுத்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சுதேசி 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சுதேசி 4ஜி சேவை குறித்து மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா எழுதிய கட்டுரையும் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி இணைத்துள்ளார். இந்த சுதேசி 4ஜி தொழில்நுட்பம் மீது வெளிநாடுகள் பலவும் ஆர்வம் காட்டுவதால், ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் விரைவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.