புதுடெல்லி,
அக்டோபர் மாதம் நாடு முழுவதும் வங்கிகளுக்குப் பல விடுமுறை நாட்கள் வரவுள்ளன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளான அக்டோபர்5, 12, 19, மற்றும் 26 ஆகிய நாட்களிலும், இரண்டாவது சனிக்கிழமையான அக்டோபர் 11 மற்றும் நான்காவது சனிக்கிழமையான அக்டோபர் 25 ஆகிய நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
இதுதவிர, வெவ்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பண்டிகைகள் காரணமாக அக்டோபரில் மட்டும் 15 நாட்களுக்கும் மேல் வங்கிகள் இயங்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
முக்கிய விடுமுறைகளின் விவரம் வருமாறு:-
அக்.1: மகாநவமி, தசரா, விஜயதசமி, மற்றும் துர்கா பூஜை போன்ற பண்டிகை களை கொண்டாடும் தமிழ் நாடு, திரிபுரா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா உட்பட பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
அக்.2: தசரா, விஜயதசமி, துர்கா பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற காரணங்களுக்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் இயங்காது.
அக்.20: தீபாவளி, நரக சதுர்தசி மற்றும் காளி பூஜை பண்டிகைகளை முன்னிட்டு மராட்டியம், ஒடிசா, சிக்கிம், மணிப்பூர்,ஜம்மு, காஷ் மீர் மற்றும் பீகார் தவிர மற்ற மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
அக்.21 -23 (தீபாவளி வார விடுமுறை): தீபாவளி அமாவாசை, லட்சுமிபூஜை, கோவர்தன் பூஜை, பலிபிரதிபதா மற்றும் பாய் தூஜ் போன்ற பண்டிகைகள் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்ப இந்த 3 நாட்களும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். உதாரணமாக, அக்டோபர் 22 அன்று குஜராத், மராட்டியம், கர்நாடகா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் இயங்காது.
அக்.27,28: சத் மஹாபர்வம் பண்டிகையை முன்னிட்டு மேற்குவங்கம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வங்கிகள் இயங்காது. அக்.31 சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறும். எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிப் பணிகளைத் திட்டமிடும்போது, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் விடுமுறை அட்டவணையை உறுதி செய்துகொண்டு செயல்படுவது நல்லது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.