கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘சக்தி’ தீவிர புயல், குஜராத் மாநிலம் துவாரகாவிலிருந்து மேற்கே 820 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (அக்.6) முதல் அக்.11-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும். 8-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

9-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி மதுரை மாவட்டம் எழுமலையில் 13 செமீ, கிருஷ்ணகிரியில் 12 செமீ, நாமக்கல்லில் 11 செமீ, சேலம் மாவட்டம் எடப்பாடியில் 10 செமீ, சங்கரி துர்க்கத்தில் 7 செமீ, தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணையில் 6 செமீ, சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, விருதுநகர், கரூர் மாவட்டம் தோகைமலை, மதுரை மாவட்டம் பேரையூர், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.