சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – பதறிய மக்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மயிலாடுதுறை கிராமத்தில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீபாவளி நெருங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் சிவகாசி பகுதியில் பட்டாசு விற்பனை ஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்கு வந்து பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று சிவகாசி அருகே உள்ள மயிலாடுதுறை என்கின்ற கிராமத்தில் செல்வகுமார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் பட்டாசு விற்பனைக்கான சோதனை நடத்தும் போது, பட்டாசு வெடித்து சிதறியதால் பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. வெடிச் சத்தத்தால் சுற்றுவட்டார மக்கள் அச்சத்துடன் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

பட்டாசு கடையில் வெடி விபத்து

தகவல் கிடைத்ததும் சிவகாசியிலிருந்து தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வெடி விபத்தால் அருகிலுள்ள பட்டாசு கடைகளிலும் அபாயம் நிலவியது. இருந்தும் அருகிலுள்ள கடைகளில் சிறிது சேதமடைந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.