கொழும்பு,
13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், இலங்கையில் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாட தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா 23 ரன்களிலும், பிரதிகா 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஹெர்லின் 46 (65) சிறப்பாக விளையாடினார். பின்னர் களமிறங்கிய ஜெரேமியா 32 ரன்களிலும், தீப்தி 25 ரன்களிலும், ரானா 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தபோதும் ஆட்டமிழக்கவில்லை. இறுதியில் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் டையானா பைஹ் அதிக அளவாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து, 248 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. ஆனால், தொடக்க வீராங்கனைகள் முனிபா 2 ரன்களிலும், ஷமாஸ் 6 ரன்களிலும் அவுட் ஆனார்கள். எனினும், அடுத்து வந்த சிட்ரா அமின் பொறுப்பாக விளையாடினார். அவர் 81 (106 பந்துகள், 9 பவுண்டரிகள், 1 சிக்சர்) ரன்கள் எடுத்து அணிக்கு வலுவூட்டினார்.
ஆனால், மற்ற வீராங்கனைகளான ரியாஸ் 2 ரன்களிலும், நடாலியா பர்வேஷ் 33 ரன்களிலும், கேப்டன் பாத்திமா 2 ரன்களிலும், சிட்ரா நவாஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் அணி, 43 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.