ராஜஸ்தான்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபர் கைது

ஜெய்ப்பூர்,

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. 4 நாட்கள் நடந்த மோதல் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப்பின் முடிவுக்கு வந்தது.

இதனிடையே, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானா, பஞ்சாப், காஷ்மீர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த யூடியூபர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் மன்கத் சிங். இவர் கடந்த 2023ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுடன் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பை சேர்ந்தவர் ஆவார். அந்த பெண்ணின் பேச்சில் மயங்கிய மன்கத் சிங் இந்திய தொடர்பான உளவு தகவல்களை கொடுத்துள்ளார். ராஜஸ்தானில் செயல்பட்டு வரும் ராணுவ, விமானப்படை தளங்கள் தொடர்பான தகவல்களை கொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ராஜஸ்தான் போலீசார் மன்கத் சிங்கை நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.