ஆப்கன் அமைச்சரின் வருகையின்போது பெண் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை: தியோபந்த் நிர்வாகம்

சஹாரன்பூர்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகியின் செமினரி வருகையின்போது பெண் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதை தடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தாருல் உலூம் தியோபந்த் தெரிவித்துள்ளது.

நேற்று ( அக்டோபர் 11) ஆப்கன் அமைச்சர் முட்டாகி உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள தாருல் உலூம் தியோபந்த் இஸ்லாமிய கல்வி நிறுவனத்துக்கு வருகை தந்தார். அதிகப்படியான கூட்டம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக கடைசி நேரத்தில் அவர் பங்கேற்க இருந்த பொது நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த தாருல் உலூம் நிகழ்ச்சியின் ஊடகப் பொறுப்பாளரும், தியோபந்த் மக்கள் தொடர்பு அதிகாரியுமான அஷ்ரப் உஸ்மானி, ” முட்டாகியின் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அலுவலகத்திலிருந்து எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. பெண் பத்திரிகையாளர்கள் வருகை குறித்து எங்கிருந்தும் எந்த உத்தரவும் வரவில்லை.

இந்த நிகழ்விற்கு எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் வந்தனர். எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக பொது நிகழ்வை ரத்து செய்ய உள்ளூர் நிர்வாகம் பரிந்துரைத்ததால், ஆப்கானிஸ்தான் அமைச்சரின் உரை நடக்கவில்லை. பெண் பத்திரிகையாளர்களை தனித்தனியாக உட்கார வைத்ததாக பல்வேறு விஷயங்கள் பரவின, இவை அனைத்தும் ஆதாரமற்றவை. இன்றைய நிகழ்வில் பெண் நிருபர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டனர். பெண் நிருபர்களுக்கான இருக்கை ஏற்பாடுகள், ஆண் நிருபர்களுடன் சேர்த்தே ஏற்பாடு செய்யப்பட்டன.

நெரிசல் அதிகமாக இருந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்ததால், முட்டாகி டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு, விருந்தினர் மாளிகையில் உள்ள ஊடகவியலாளர்களை அவசரமாக ஒரு உரையாடலுக்கு அழைத்தோம்.

கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும், ஆப்கானிஸ்தான் அமைச்சரின் நிகழ்வில் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டது, பெண் பத்திரிகையாளர்கள் நிகழ்விலிருந்து விலக்கி வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளை மறுக்கும் அளவுக்குப் போதுமான ஆதாரமாக இருந்தது” என்று அவர் கூறினார். மேலும் அந்த பெண் பத்திரிகையாளர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தான் அமைச்சர் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பெண் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது பெரும் சர்ச்சையாகியது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்தன.

இதற்கிடையில், ஜமியத் உலமா-இ-ஹிந்தின் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி, வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு குறித்து அளித்த விளக்கத்தில், ​​”நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டது தற்செயல் நிகழ்வு. ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பெண்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு வருவதை தடுக்கவில்லை. அது தவறான பிரச்சாரம்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.