மதுரை: அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது தொடர்பான மனுக்களை விசாரிக்க விரைவில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரையைச் சேர்ந்த திருக்குமரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி குழந்தைகள், மாணவ, மாணவிகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
சரியான கூட்ட மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு இல்லாமை, உரிய நேரத்தில் கூட்டம் நடத்தாமை, பொதுமக்கள் பாதுகாப்புக்கான அரசு வழிகாட்டுதல் பின்பற்றப்படாதது, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அடிப்படை வசதிகள், அவசர நடவடிக்கை திட்டம் இல்லாமை ஆகியன கரூர் சம்பவத்துக்கு முக்கியக் காரணங்களாகும்.
எனவே, வருங்காலத்தில் அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கூட்டம் நடத்தும்போது அரசின் கட்டுப்பாடு, கண்காணிப்பை மீறாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கூட்டம் நடைபெறும் இடத்தில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை, அவசர வசதிகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்படாத நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும்.
கட்சியினரின் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை முறைப்படுத்தவும், உரிய பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவும், குறுகலான பகுதிகளுக்கு பதில் அதிக அளவில் ஆட்கள் கூடும் பரப்பளவு கொண்ட இடத்தில் அரசியல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
தஞ்சாவூர் ஸ்ரீனிவாசபுரத்தை சேர்ந்த பிரகாஷ், தாக்கல் செய்த மனுவில், “உரிய அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள், டிஜிட்டல் பதாகைகள், கட்சி கொடிகள், சுவர் விளம்பரங்கள் செய்வதை தடுக்கவும், அசம்பாவிதங்கள் நிகழும் சூழலில் நிகழ்வை ஒருங்கிணைத்த கட்சி சேதங்கள், காயங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு முழு பொறுப்பு ஏற்கவும் உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி பூர்ணிமா அமர்வு விசாரித்து, “அரசியல் கூட்டங்களை நடத்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிப்பது தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் அமைக்கப்படும். அதன் பிறகு அரசியல் நிகழ்வுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிப்பது தொடர்பான அனைத்து மனுக்களும் விசாரிக்கப்படும்” என உத்தரவிட்டனர்.