புதுடெல்லி: ரூ.79,000 கோடி மதிப்பில், முப்படைகளுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் ராணுவ தளவாட பொருட்கள் கொள்முதலுக்கு உடனுக்குடன் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரூ.67,000 கோடியில் தள வாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நவீன தளவாடப் பொருட்கள் தேவை என முப்படைகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு தளவாடப் பொருட்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் கடற்படைக்காக, கரையில் ராணுவ வீரர்கள், சரக்குகளை இறக்கும் வசதியுடன் கூடிய போர்க்கப்பல்கள், 30 எம்.எம் பீரங்கிகள், நவீன எடை குறைவான டார்பிடோக்கள், எலக்ட்ரோ ஆப்டிக்கல் கண்காணிப்பு கருவிகள், 76 எம்எம் பீரங்கிகளுக்கான ஸ்மார்ட் குண்டுகள் ஆகியவை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தரைப்படை மற்றும் விமானப்படையுடன் இணைந்து பணியாற்றவும், அமைதிப்படை நடவடிக்கைகள், பேரிடர் காலத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் கடற்படைக்கு எல்பிடி கப்பல்கள் உதவியாக இருக்கும். அதேபோல் டிஆர்டிஓ உள்நாட்டில் தயாரித்துள்ள ஏஎல்டபிள்யூடி டார்பிடோக்கள் மூலம் எதிரி நாட்டின் அனைத்து வகையான நீர்மூழ்கி கப்பல்களையும் தகர்க்க முடியும். 30 எம்எம் என்எஸ்ஜி பீரங்கிகள், கடல் கொள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்த கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு உதவியாக இருக்கும்.
தரைப்படைக்காக, எதிரி படைகளின் கவச வாகனங்களை தகர்க்கும் நாக் ஏவுகணைகள் மற்றும் எலக்ட்ரானிக் உளவு கருவிகள் மற்றும் கன ரக வாகனங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விமானப்படைக்காக தானியங்கி ஆயுதங்கள் உட்பட இதர தளவாடப் பொருட்கள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.79,000 கோடி.