உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று எட்டாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் தலைநகர் கீவ்வை இலக்காக வைத்து போரிட்டு வந்த ரஷிய ராணுவத்தின் குறி தற்போது கார்கிவ் நகரின் பக்கம் திரும்பியுள்ளது.
கடந்த சில தினங்களாக இந்த நகரை குறிவைத்து ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மருத்தவ மாணவர் நவீன் நேற்று முன்தினம் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து கார்கிவ் நகரில் தங்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. மேலும் அவர்கள் பெசோசின், பபாயி, பெஸ்லியுடோவ்கா உள்ளிட்ட பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருந்தது.எனினும் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறுவதில் இந்திய மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் குழுவை பிணைக் கைதிகளாக உக்ரைன் படைகள் பிடித்து வைத்திருப்பதாகவும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
‘கார்கிவ் நகரில் இருந்து உடனே வெளியேறுங்க!’ – இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!
‘உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேறி பெல்கோரோட் செல்ல விரும்பும் இந்திய மாணவர்களின் பெரும் குழுவை உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கார்கிவ்வில் வலுக்கட்டாயமாக பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்று ரஷிய ராணுவம் வெளியிட்டுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது அவர், ‘கார்கிவ் நகரில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும், இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப ரஷிய ராணுவம் உதவ வேண்டும்’ எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
3ம் உலகப் போர் எப்படி இருக்கும்? – ரஷ்யா பரபரப்பு தகவல்!
இந்த நிலையில் உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுப்பு: இதனிடையே, கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ரஷிய ராணுவம சொல்வதை போல, உக்ரைனில் இந்தியர்கள் யாரும் பிணைக் கைதிகளைக பிடித்து வைக்கப்படவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.