சர்வதேச திரைப்பட விழா நடுவர் குழுவில் பாலிவுட் நடிகை| Dinamalar

மும்பை-அடுத்த மாதம் நடைபெற உள்ள, ’75வது கான்ஸ் திரைப்பட விழா’வின் நடுவர் குழுவில், ‘பாலிவுட்’ நடிகை தீபிகா படுகோனே இடம் பெற்றுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழா, ஐரோப்பிய நாடான பிரான்சின் கான்ஸ் நகரில், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், உலகம் முழுதும் இருந்து தேர்வு செய்யப்படும் படங்கள் திரையிடப்படும். அவற்றில் இருந்து ஒரு சிறந்த படம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கு விருது வழங்கப்படும். 75வது கான்ஸ் திரைப்பட விழா, மே 17 – 28 வரை நடக்கிறது.இந்நிலையில், சிறந்த திரைப்படத்தை தேர்வு செய்யும் நடுவர் குழுவில், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே 36, இடம்பெற்றுள்ளார்.

இக்குழு, கான்ஸ் திரைப்பட விழாவின் கடைசி நாளான மே 28ம் தேதி, சிறந்த திரைப்படத்தை தேர்வு செய்து, அப்படக்குழுவை கவுரவிக்க உள்ளது. கடந்த 1982ல், கான்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவில் மறைந்த இயக்குனர் மிருணாள் சென் இடம் பிடித்தார். அக்குழுவில் இடம்பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். கடந்த, 2003ல், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், 2013ல் நடிகை வித்யா பாலன் ஆகியோரும், இக்குழுவில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.