“இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்..!" – ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு

ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் அறிக்கைகள் மற்றும் சுற்றறிக்கைகள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் வருகின்றன. பொது மக்களுக்கும், செய்தி நிறுவனங்களுக்கு மட்டும் அறிக்கை தமிழில் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜிப்மர் நிர்வாகம் சார்பில் இயக்குநர் பெயர் குறிப்பிட்டு ஒரு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

ஜிப்மர் அலுவலகப் பணிக்குப் பயன்படுத்தப்படும் மொழி குறித்த அந்த அறிக்கையில், அலுவலக மொழி 1976-ம் ஆண்டு சட்ட விதியை குறிப்பிட்டு, “மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற குழு அளித்துள்ள வாக்குறுதியின்படி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் என அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும். கூடுமானவரை அவையும் இந்தி மொழியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனிமொழி

ஜிப்மரின் இந்த அறிக்கையைக் கண்டித்து, நெட்டிசன்கள் டிவிட்டரில் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மையை மாற்றுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்னையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதல்ல” எனப் பதிவிட்டிருக்கிறார்.

அதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் ரவிக்குமார், புதுச்சேரி சட்டமன்ற எதிர் கட்சித்தலைவரும்… தி.மு.க மாநில அமைப்பாளருமான இரா.சிவா ஆகியோரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.