நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடும் எம்.பி.க்களை அலறவிடும் கொசுக்கள்!

நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சஸ்பெண்ட் எம்.பி.க்களை கொசுக்கள் அலற விட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் ஆரம்பித்த நாள் முதலாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மக்களவையும், மாநிலங்களவையும் தொடர்ந்து முடங்கி வருகின்றன.
இதனிடையே, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவை மாண்பை சீர்குலைத்ததாக கூறி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் 50 மணிநேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் நாளை இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.
image
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்களை நேற்று இரவு கொசுக்கள் பிய்த்து எடுத்துள்ளதாக தெரிகிறது. கொசுத் தொல்லையால் அவதிப்பட்ட எம்.பி.க்கள் கொசுவத்திகளை தங்களை சுற்றி வைத்தனர். இருந்தபோதிலும், கொசுக்கள் அவர்களை விடவில்லை. இதனால் கடுப்பான தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒரு வீடியோ பதிவை ட்விட்டரில் வெளியிட்டார். அந்த வீடியோவில், ஒரு எம்.பி.யின் கையில் கொசு கடித்துக் கொண்டிருக்கிறது. அருகிலேயே கொசுவத்தியும் எரிந்து கொண்டிருக்கிறது. பின்னர் அந்தக் கொசுவை அந்த எம்.பி. கையால் நசுக்குகிறார்.
அந்த வீடியோவுக்கு கீழே, “சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா அவர்களே, நாடாளுமன்றத்தில் உள்ள இந்தியர்களின் ரத்தத்தை கொசுக்களிடம் இருந்து காப்பாற்றுங்கள். நாடாளுமன்றத்து்ககு வெளியே இருக்கும் இந்தியர்களின் ரத்தத்தை அதானியிடம் இருந்து காப்பாற்றுங்கள்” என மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.