கவுன்சிலர்களின் கள ஆய்வுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவேண்டும்: சென்னை மேயர் பிரியா உத்தரவு

சென்னை: கவுன்சிலர்களின் கள ஆய்வுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய கவுன்சிலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், வார்டு பிரச்சினைகளையும் மேயர் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட கவுன்சிலர் ரேணுகா, “ஆய்வுகளின்போது வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து உரிய தகவல்களை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் தருவதில்லை” என்று புகார் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஐயூஎம்எல் கவுன்சிலர் பாத்திமா அகமது, “தற்போது உள்ள மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களாக உள்ளதால் தற்போதைய கவுன்சிலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதால் அனைவரையும் மொத்தமாக இடமாற்றம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பின்னர் கல்வி நிலைக்குழு தலைவர் விஸ்வநாதன் பேசுகையில், “சாலைப் பணிகள் வடிகால் பணிகளை ஒப்பந்ததாரர்கள் அலட்சியமாக மேற்கொள்கின்றனர். மாநகராட்சி நிதியினை வீணடிக்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம். ஒப்பந்த பெற்ற கான்ட்ராக்டர்கள் பணிகளை தொடங்கும் போதும், முடிவடையும் போதும் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பணிகளின் நிலை குறித்து கவுன்சிலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வின்போது, அவர்கள் கேட்கும்போது தகவல்களை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கட்டாயம் வழங்கி ஒத்துழைப்பு தரவேண்டும். அனைத்து பணிகளும் தரமாக மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். இதுகுறித்து ஏற்கெனவே அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. உத்தரவை அதிகாரிகள் மீறக் கூடாது. முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.