குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு தனது கட்சி ஆதரவளிக்கும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜக்தீப் தங்கர் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அதுபோல் வரும் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுநலன் மற்றும் இயக்கத்தின் நலன் கருதி பகுஜன் சமாஜ் கட்சி குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தங்கரை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளது என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.