கருப்பு உடை போராட்டம் பற்றி சர்ச்சை அமித்ஷா கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி ராமனுக்கு பதிலாக ராவணனை வணங்குவதா?

புதுடெல்லி: ‘மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே, காங்கிரசின் கருப்பு உடை போராட்டத்தை ராமர் கோயிலுடன் பாஜ தொடர்புபடுத்தி உள்ளது,’என காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து நாடு முழுவதும் நேற்று முன்தினம் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. டெல்லியில் நடந்த போராட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்பி.க்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கருப்பு உடைகளை அணிந்து போராட்டம் நடத்தினர்.  இது பற்றி கருத்து தெரிவித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட நாளை கருப்பு  தினமாக அனுசரித்து, காங்கிரஸ் இந்த கருப்பு  உடை போராட்டத்தை நடத்தி இருக்கிறது,’என குற்றம்சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இக்கட்சி மூத்த தலைவரான ஏ.ஆர். சவுத்ரி நேற்று கூறுகையில், ‘விலைவாசி உயர்வையும், வேலை வாய்ப்புகள் பறிபோனதையும் கண்டித்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்தை பாஜ.வால் சகிக்க முடியவில்லை. அதனால்தான், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ராமர் கோயில் விவகாரத்தை இத்துடன் தொடர்புபடுத்தி இருக்கிறது. பாஜ.வின் ஒரே ஆயுதம் ராமர்தான். ராமனை வணங்குவதற்கு பதிலாக, மக்களை  துன்புறுத்திய ராவணனை அது வணங்கி வருகிறது,’என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.