'ஏக்நாத் ஷிண்டே அரசு நீண்ட காலம் நீடிக்காது' – சொல்கிறார் ஆதித்ய தாக்கரே!

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு நீண்ட காலம் நீடிக்காது என, அம்மாநில முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே ஆரூடம் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அக்கட்சி மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த உத்தவ் தாக்கரே, வேறு வழியில்லாமல், முதலமைச்சர் மற்றும் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளார்.

இதை அடுத்து, சிவசேனா கட்சிக்கு உரிமைக் கோரி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில், ஏக்நாத் ஷிண்டே தரப்பில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு உத்தவ் தாக்கரே தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், தலைநகர் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், உத்தவ் தாக்கரேவின் மகனும், முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே பேசியதாவது:

உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்த்த எம்எல்ஏக்கள் மீது எனக்கு கோபம் இல்லை. ஆனால் அவர்கள் மீது வருத்தமாக உள்ளது. துரோகிகள் எனக் கூறுவதை அவர்களை விரும்பவில்லை. அவர்கள் பால் தாக்கரேவின் உண்மையான தொண்டர்களாக இருந்திருந்தால், அசாமில் வெள்ளம் ஏற்பட்ட போது, ஓட்டல் அறையில் இருந்து கொண்டு மலைகளையும், இயற்கையையும் ரசிக்காமல், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பதற்காக களத்தில் இறங்கி இருப்பார்கள்.

உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் போது, கோவாவில் உள்ள பாரில் இருந்தவாறு நடனமாடினர். இவர்கள் எப்போதும் துரோகிகளாகவே இருப்பார்கள். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சட்ட விரோதமானது. இதனால் அது நீண்ட காலம் நீடிக்காது.

மகா விகாஸ் அகாதி தலைமையின் கீழ் நடைபெற்ற மாநிலத்தின் முன்னேற்றத்தை அவர்கள் தடுத்து நிறுத்தினர். கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக கையாண்டு, மாநிலத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணி வந்த உத்தவ் தாக்கரே போன்ற நல்ல மனிதருக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.