14வது துணை ஜனாதிபதி: ஆக. 11ல் பதவியேற்கிறார் ஜக்தீப் தன்கர்!

நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக, வரும் 11 ஆம் தேதி, ஜக்தீப் தன்கர் பதவியேற்க உள்ளார்.

இந்தியாவின் 13வது குடியரசுத் துணைத் தலைவராக உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதை அடுத்து, 14வது குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில், நேற்று நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்த்து மொத்தம் 780 எம்பிக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 725 எம்பிக்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 92.94 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், அவற்றில் 15 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

நேற்று இரவு 8 மணி அளவில் வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தன்கர், 528 வாக்குகளையும், மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் பெரும்பான்மையை விட அதிக வாக்குகளை பெற்று ஜக்தீப் தன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பாஜிக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜக்தீப் தன்கரை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில், நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக, வரும் 11 ஆம் தேதி, ஜக்தீப் தன்கர் பதவியேற்க உள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

குடியரசு துணைத் தலைவருக்கான பணிகள்
* நாடாளுமன்ற மாநிலங்களவையின் தலைவர் ஆவார்

* சுகவீனம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால், குடியரசுத் தலைவர் தற்காலிகமாக இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவரின் பணிகளை குடியரசு துணைத் தலைவர் நிறைவேற்றுவார்

* குடியரசுத் தலைவர் பதவியில் ஏதேனும் வெற்றிடம் ஏற்பட்டால், அவரது மரணம், ராஜினாமா, பதவி நீக்கம் அல்லது பதவி நீக்கம் போன்ற காரணங்களால் குடியரசுத் துணைத் தலைவர் செயல்படுவார்

* புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் பதவியேற்கும் வரை குடியரசு துணைத் தலைவர் குடியரசுத் தலைவரின் பணிகளை மேற்கொள்வார்.

* குடியரசு துணைத் தலைவர், குடியரசுத் தலைவரின் பணிகளைச் செய்யும் போது மாநிலங்களவை தலைவர் பணிகளை செய்ய மாட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.