தடை அதை உடை… போர்க்குணம் கொண்ட அரசியல் பாய்ச்சலில் ஜோதிமணி!

ஜோதிமணி என்றாலே அவரது போராட்டக் குணம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். சொந்த மாவட்டமான கரூரில் தொடங்கி டெல்லி வரை தனது ஆவேசக் குரலை தீப்பிழம்பாய் வெளிப்படுத்தியுள்ளார். உள்ளாட்சி அமைப்பாக இருந்தாலும் சரி. மத்திய அரசாக இருந்தாலும் சரி. தவறு என்றால் தவறு தான். உடனே எதிர்வினை ஆற்ற தயங்க மாட்டார். இவர் குறித்த எதிர்மறை விமர்சனங்களை எல்லாம், அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு பதிலடி கொடுக்க வேண்டிய விஷயங்களுக்கு சரவெடியாய் வெடித்து விடுவார்.

தற்போது கரூர் மக்களவை தொகுதி எம்.பியாக இருக்கும் ஜோதிமணியை தான் பார்த்திருப்பீர்கள். 21 வயதில் மக்கள் பணியாற்ற கிளம்பிய இளம் ஜோதிமணியை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தனது ஊரில் தலித்களுக்கு எதிராக நிகழ்ந்த அநீதிகளை கண்டு வெகுண்டெழுந்து போராட்டக் குரல் கொடுத்தவர். தனி ஆளாய் போராடுவதில் பலனில்லை என்பதை உணர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கி உள்ளூர் மக்களை ஆச்சரியப்பட வைத்தார். தனது குடும்பத்தினர் ஆதரவு இல்லாத போதும், மக்கள் ஆதரவுடன் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்று முதல் அரசியல் பணியை தொடங்கினார்.

அப்போது சந்தித்த பிரச்சினைகள், கிடைத்த அனுபவங்களை “நீர் பிறக்கும் முன்” என்ற நூலாக அவரே எழுதி வெளியிட்டிருக்கிறார். இளம் வயதிலேயே சிறப்பாக மக்கள் பணியாற்றியதற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. 2006ல் அமெரிக்க ஒன்றியத்தில் நடந்த ஆசிய இளம் தலைவர்கள் உச்சி மாநாடு, 2009ல் மலேசியாவில் நடந்த இளம் அரசியல் தலைவர்களுக்கான உச்சி மாநாடு, 2010 டெல்லியில் நடந்த இன்றியமையாத ஆசிய பெண் தலைவர் குரல் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டு சிறப்புக்குரிய நபராக மாறினார்.

சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை 2011ஆம் ஆண்டு கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மக்களவை தேர்தலை பொறுத்தவரை கரூர் தொகுதியில் 2014ல் தோல்வியை தழுவினார். ஆனால் 2019ல் அதே கரூரில் வெற்றி வாகை சூடினார். தமிழகத்தில் திமுக கூட்டணி அரசில்

கட்சி இருந்தாலும், தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஜோதிமணி ஒருபோதும் தயங்கியது இல்லை. குறிப்பாக 2022 உள்ளாட்சி தேர்தலின் போது திமுக உடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜோதிமணி சந்தித்த பிரச்சினைகள் ஏராளம்.

அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்றியதாக கூறப்பட்ட விஷயம் பெரும் சர்ச்சையானது. கரூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிரான விஷயமாக இருந்தாலும் சரி, மத்திய அரசுக்கு எதிரான விஷயமாக இருந்தாலும் சரி. ஆட்சியர் அலுவலகம் தொடங்கி நாடாளுமன்றம் வரை ஜோதிமணியின் பேச்சுகள் அனல் பறக்கும். இரவு, பகல் பாராமல் போராட்டம் தொடரும். புள்ளி விவரங்கள் தெறிச்சு ஓடும்.

இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி, இந்திய தேசிய காங்கிரஸ் என ஒன்றிய உறுப்பினரில் தொடங்கி இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வரை பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார். அரசியல் பணியாக இருந்தாலும், மக்கள் பணியாக இருந்தாலும் இரண்டிலும் சிறிதும் குறை வைத்ததில்லை.

அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கும் சரி, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் சரி. எப்போதும் உரிய மதிப்பளித்து வந்துள்ளார். இத்தகைய தனித்துவம் வாய்ந்த அரசியல் தலைவரை மக்கள் எப்போதும் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. நேற்றைய தினம் தனது பிறந்த நாளை (ஆகஸ்ட் 9) எளிமையாக கடந்து சென்றுள்ள நிலையில், அர்ப்பணிப்போடு மக்கள் பணியாற்றுவதற்கு தயாராகி விட்டதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.