சென்னை: குற்ற வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக 6 வழக்கறிஞர்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், நாகாலாந்தில் உள்ள அரசுப் பள்ளியில் 23 ஆண்டுகளாக பணியாற்றியதை மறைத்து வழக்கறிஞராக பதிவு செய்துள்ளதாக கூறி வழக்கறிஞர் தொழில் செய்ய அவருக்கு பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.
இதேபோல குற்ற வழக்கை எதிர்கொண்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார், கார்த்தி ஆகியோருக்கும், போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட கரூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கும் பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.
வழக்கறிஞர் சங்க உறுப்பினர்களை மிரட்டி லஞ்சம் பெற்றதாக, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளங்கோவன் மற்றும் புகழேந்தி ஆகியோரையும் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.