திருமலை: திருப்பதியில் விஐபி தரிசனம் என்ற பெயரில் ரூ.10,500 கேட்கின்றனர். இந்து மத ஸ்தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாகிவிட்டது’ என பாலிவுட் நடிகை வீடியோவுடன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக உத்தரபிரதேச மாநிலம் ஹஸ்தினாபூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும், பாலிவுட் நடிகையுமான அர்ச்சனா கவுதம் கடந்த 1ம் தேதி வந்தார். அப்போது, திருமலை திருப்பதி தலைமை செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி, பிறகு விஐபி டிக்கெட் ரூ.500 செலுத்தி பெற்று கொள்ளலாம் என ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால், அங்கிருந்த ஊழியர்களிடம் நடிகை அர்ச்சனா கவுதம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே அங்கிருந்த ஊழியர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி அங்கிருந்தபடி செல்பி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோயை நடிகை அர்ச்சனா கவுதம் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ‘இந்து மத ஸ்தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது. மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆந்திர மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விஐபி தரிசனம் என்ற பெயரில் ரூ.10,500 கேட்கின்றனர்’ என கூறப்பட்டிருந்தது.
*அதிகாரிகள் விளக்கம்
திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘‘2ம் அபிஷேகம் நடப்பதால் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி தரிசனம் வழங்கவில்லை. எனவே, உங்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வேண்டுமென்றால் ரூ.10 ஆயிரம் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கி பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அவர் தவறாக புரிந்து கொண்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்’ என்றனர்.