லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்குக்கு பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டில் பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன், பிரதமராக பதவியேற்றார்.
மூன்று ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு பிரதமருக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அடுத்தடுத்து மூத்த அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். கடும் எதிர்ப்பு காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
அந்த கட்சி விதிகளின்படி 20 எம்.பி.க்களின் ஆதரவு பெற்றவர்கள் பிரதமர் பதவிக்கான போட்டியில் பங்கேற்க முடியும். இதன்படி, 11 பேர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் 3 பேர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினர். 8 பேர் களத்தில் இருந்தனர். ஐந்து சுற்றுகளாக நடந்த உட்கட்சி தேர்தலில் கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் வாக்களித்தனர். குறைவான வாக்குகளை பெற்றவர்கள் ஒவ்வொரு சுற்றிலும் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர்.
இறுதியில், வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸுக்கும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதிக்கட்ட தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் வாக்களித்தனர். இதன் முடிவுகள் நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில், லிஸ் ட்ரஸ் 57.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக்குக்கு42.6 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதிக வாக்குகளை பெற்ற லிஸ் ட்ரஸ், பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று அதிகாரபூர்வமாக பதவியேற்க உள்ளார். அவருக்கு ராணி எலிசபெத் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
தமிழக வம்சாவளி பெண்
போரிஸ் ஜான்சன் அரசில் குஜராத்தைச் சேர்ந்த பிரீத்தி படேல் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். புதிய பிரதமராக பதவியேற்க உள்ள லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன், உள்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
அவரது தாயார் உமா, மொரீஷியஸில் தமிழ் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை கிறிஸ்டி பெர்னான்டஸ் இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய வம்சாவளி தலைவர்களில் சுயெல்லா பிராவர்மேன் மட்டுமே அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என்று தெரிகிறது.