ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். 29 பேர் படுகாயம் அடைந்தனர். ஜம்மு- காஷ்மீர், பூஞ்ச் மாவட்டம், கலி மைதான் என்ற பகுதி நோக்கி நேற்று காலை மினி பேருந்து சென்று கொண்டிருந்தது. சாஜியன் பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் அது சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு, விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 11 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 29 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்காவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.