தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று (அக். 16) பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக. 16-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக். 17-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக். 18, 19-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்யக்கூடும்.

16-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 12 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அக். 18, 19-ம் தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகள், தென் தமிழககடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.