டி20 உலக கோப்பை: நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

கீலாங்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நமிபியா, ‘பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும்.

சூப்பர்12 சுற்றில் ஏற்கனவே நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (குரூப்1), இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (குரூப்2) அணிகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றுடன் முதல் சுற்றில் இருந்து வரும் 4 அணிகளும் இணையும். சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் தங்களுக்குள் ஒரு முறை மோத வேண்டும்.

இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். இன்று நடைபெறும் டி20 உலக கோப்பையின் முதல் சுற்றின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை-நமிபியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.