முறைகேட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் கூட்டுறவு வங்கி காசாளர் சரமாரி வெட்டிக்கொலை: கிணற்றில் சடலத்தை வீசிய பயங்கரம்: தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே முறைகேட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கி காசாளரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்கள், சடலத்தை கிணற்றில் வீசி சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, பெருந்துறைப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட எடக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி(52). இவர், தென்கரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கூட்டுறவு வங்கியில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக காசாளர் வீராசாமி உட்பட 2 பேர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் வீராசாமி வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று முன்தினம் தனது விவசாய நிலத்திற்கு சென்ற வீராசாமி பின்னர் வீடு திரும்பவில்லை.  சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் இல்லை. பல இடங்களில் தேடி பார்த்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று அங்குள்ள விவசாய கிணற்றின் அருகே வீராசாமியின் செருப்பு மற்றும் செல்போன் கிடந்தது. அவ்வழியாக சென்றவர்கள் சந்தேகத்தின்பேரில், அருகில் உள்ள கிணற்றில் எட்டி பார்த்தபோது வீராசாமி சடலமாக கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்து வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர், அப்பகுதி மக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து சடலம் மேலே கொண்டுவரப்பட்டது. வீராசாமியின் தலை, முகம் மற்றும் உடலின் பல்வேறு  இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. அவரை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்து, சடலத்தை  கிணற்றில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.வாணாபுரம் போலீசார் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.