20 ஓவர் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 10 நாட்களுக்கு முன்பே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்று விட்டது. நேரடியாக சூப்பர்12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணிக்கு இரண்டு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக) அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது.

இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட அனைத்து முன்னணி வீரர்களும் இந்த பயிற்சி ஆட்டத்தில் களம் காணுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டு அணியுடன் இணைந்து விட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் பயிற்சி களத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளார்.

இதே போல் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்து உள்ளது. இதன் படி இந்திய அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.