புதுடில்லி :கடந்த ஆண்டு பண்டிகை காலத்தை போல, நடப்பு ஆண்டிலும், தங்கம் விற்பனை அதிகமாக இருக்குமா என்பது சந்தேகமே என தெரிவித்துள்ளது, உலக தங்க கவுன்சில்.
கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில், தங்கம் விற்பனை அமோகமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அவ்வாறு இருக்குமா என்பது சந்தேகமே என்றும், நுகர்வோர், இம்முறை கடைகளை நோக்கி படையெடுக்கவில்லை என்றும், உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில், தங்க ஆபரண விற்பனை, கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்தது. கொரோனா தொற்று காரணமாக, அதற்கு முந்தைய இரு ஆண்டுகளாக விற்பனை பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து, கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் விற்பனை அதிகமாக
இருந்தது.கிட்டத்தட்ட 344 டன் தங்கத்தை, இந்தியர்கள் இந்த காலகட்டத்தில் வாங்கி குவித்தனர். ஆனால், நடப்பாண்டில் அந்த அளவுக்கு இருக்காது என, உலக தங்க கவுன்சில் தலைமை செயல் அதிகாரிபி.ஆர்.சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறி உள்ளதாவது:நடப்பு ஆண்டின் முதல் பாதியை விட, நிச்சயமாக இரண்டாவது பாதியில் விற்பனை நன்றாக இருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியும்.
ஆனால், கடந்த ஆண்டு அளவுக்கு இருக்கும் என சொல்ல முடியாது. பணவீக்கம் சற்று அதிகரித்துள்ளது என்றாலும், அதனால் விற்பனையில் எந்த நெருக்கடியும் இல்லை.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.கடந்த ஆண்டு, மொத்தம் 800 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டிருக்கும் நிலையில், நடப்பாண்டில் விற்பனை 750 டன் ஆக இருக்கக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement