தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குசுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அக்.19முதல் 22 வரை 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (அக்.19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி

அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில்அக்.20-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, மேலும் வலுவடைந்து 22-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.

தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 19-ம் தேதிமணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.