தஞ்சாவூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைப்பெற்று வருகின்றது. அதில் ஒரு பகுதியாக பல அடுக்கு வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த வாகன நிறுத்துமிடம் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே தெற்கு அலங்கம் பகுதியில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த வாகனம் நிறுத்தம் ஒரே நேரத்தில் 56 கார்களை நிறுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பணியானது தற்போது முடியும் தருவாயில் இருக்கின்றது. இதற்கான பணி விரைவில் முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த திட்டம் குறித்து பொதுமக்கள் தெரிவித்ததாவது, “நகர வளர்ச்சி மற்றும் வாகனங்களின் பெருக்கம் போன்றவற்றால் பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இதுமட்டுமல்லாமல், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இட பற்றாக்குறையாக இருப்பதால் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் மிகவும் அவசியம்.
மக்கள் பயன்பாட்டிற்கு இந்த பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை விரைவில் கொண்டு வர வேண்டும். இதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஓட்டுநர்கள் தங்கள் கார்களை நிறுத்த அங்கு இங்குமாக அலைய வேண்டிய அவசியம் இருக்காது” என்று தெரிவித்தனர்.