அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்: பிரதமர் மோடியிடம் விருதினை பெற்றார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.!

குஜராத்: அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் 3 – வது இடம் பிரதமர் அவர்களிடமிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் விருதினை பெற்றார். ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்கு தேசிய அளவில் 3 – ம் இடம் பிடித்த தமிழ் நாட்டிற்கு, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அன்று நடைபெற்ற விழாவில் பாரத பிரதமர் அவர்களிடமிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் விருதினை பெற்றார்.

பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தை (நகர்ப்புறம் ) சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகள் அங்கீகரிப்பதற்காக ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையால், “ பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா  விருதுகள் – 2021 மற்றும் 150  நாட்கள் சவால்கள் ’‘  என்ற அடிப்படையில், மாநிலம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான விருதுகளும், சிறப்பு பிரிவு விருதுகளும், பயனாளிகளுக்கான விருதுகள் என மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட விருதுகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற பிரிவில் தமிழகம் 3வது இடத்தையும், மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சிக்கு 3 வது இடமும், பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம், பெரிய நெகமம் பேரூராட்சிக்கு 5 வது இடமும் பிடித்து விருதுகள் பெற்றுள்ளன.    இம்மாநாட்டில் மாண்புமிகு குறு, சிறு  மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களுடன் , வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் திரு.ஹித்தேஷ்குமார் எஸ்.மக்வானா இ.ஆ.ப., வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்தராவ் இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.