காம்பியாவை தொடர்ந்து அடுத்த சர்ச்சை இந்தோனேசியாவில் 99 குழந்தைகள் பலி: இருமல் மருந்து காரணமா?

புதுடெல்லி: இந்தோனேசியாவில் இந்தாண்டில் சிறுநீரகம் பாதித்து 99 குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து, இருமல் மருந்துகளின் விற்பனைக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது. ஆப்பிரிக்கா, காம்பியாவில் இருமல் மருந்து உட்கொண்ட 66 குழந்தைகள் சமீபத்தில் பலியாயின. இந்திய மருந்து நிறுவனத்தால்  தயாரிக்கப்பட்ட மருந்துகளை சாப்பிட்டது தான் இதற்கு காரணம் என்று காம்பியா அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக இந்திய மருந்து நிறுவனத்துக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இருமல் மருந்தால் தனது நாட்டில் இந்தாண்டு 99 குழந்தைகள் பலியாகி உள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

இருமல் மருந்து காரணமாக குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறியுள்ள அது,  இந்த இருமல் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தோனேசிய சுகாதாரத்துறை அமைச்சர் புதி குனாதி சாதிக்கின் கூறுகையில், ‘குழந்தைகள் இறப்பு காரணமாக அனைத்து வகை இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,’ என்றார். உயிரிழப்பை ஏற்படுத்திய இருமல் மருந்துகளின் பெயர்களை இந்தோனேசியா  வெளியிடவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.