ஆந்திராவில் 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தில் தீடீர் தீ விபத்து: ஓட்டுனரின் சாதுர்யத்தால் உயிர்சேதம் தவிர்ப்பு..!!

விஜயவாடா: ஆந்திராவில் 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் இருந்து 40 பயணிகளுடன் அரசு பேருந்து இன்று காலை குடிவாடா நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இருந்த நிலையில், பேருந்தானது பெடப்புரி மண்டலம் புதுக்குளத்திகுடம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ பிடித்து எரிந்தது. ஓட்டுனரின் முன்னெச்சரிக்கையால் சாலையோரம் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர்.

சரியான நேரத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்து தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் மளமளவென தீ பரவ தொடங்கியது. இதுகுறித்து அறிந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.