10 லட்சம் பேருக்கு வேலை வழங்க இலக்கு: நாளை 75,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர்

அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மெகா வேலை வாய்ப்பு மேளாவை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக மெகா வேலை வாய்ப்பு மேளாவை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதன் தொடக்க விழாவில் 75,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்க உள்ளார். அனைத்து அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள மனித வளங்களின் நிலையை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து பிரதமர் இந்த பணி ஆணைகளை அளிக்க உள்ளார்.

நாடு முழுவதிலும் இருந்து பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆட்கள், மத்திய அரசின் 38 அமைச்சகங்கள் அல்லது துறைகளில் சேருவார்கள். மத்திய ஆயுதப்படை பணியாளர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், எல்.டி.சி., ஸ்டெனோ, பி.ஏ., வருமான வரி ஆய்வாளர்கள் மற்றும் எம்.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு இந்த விழாவில் பணிநியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன.

அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் தாங்களாகவோ அல்லது யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி மற்றும்ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாகவோ இந்த வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பணி வாய்ப்புக்கான தேர்வு செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, தொழில் நுட்பம் சார்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது.

அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது பிரதமரின் இலக்கு. அந்த மாபெரும் இலக்கை எட்ட தேவையான நடவடிக்கைகளை பல்வேறுஅரசு துறைகள் மற்றும் அமைச்சகங்கள் மேற்கொள்ள வேண்டும் என கடந்த ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

குடிமக்களின் நலனை உறுதிசெய்வதிலும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதிலும் பிரதமரின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்த நிகழ்வு அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு போதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் மாபெரும் வேலைவாய்ப்பு மேளாவை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.