திருவனந்தபுரம்: சபரிமலைக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆன்லைன் முன்பதிவு அறிமுகப்படுத்தப்படுகிறது என சன்னிதானம் தேவசம் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. பக்தர்களின் ஆவணங்கள் பம்பையில் உள்ள ஆஞ்சநேயா அரங்கத்தில் சரிபார்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் செய்ய கட்டாயமாக இணையவழியில் பக்தர்கள் தரிசனத்திற்காக முன்பதிவு டிக்கெட் புக் செய்ய வேண்டியது அவசியம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது. சபரிமலை ஐயப்ப தரிசனம் செய்ய பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.
ஆனால் இந்த முறை சாதாரண நாட்களைப் போல ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியதும் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலை செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை கோவிட் 19 வைரஸ் காரணமாக அதிகளவில் கூட்டம் கூடாதவாறு தடுக்கும் வகையில் ஐயப்ப தரிசனம் செய்ய இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
சபரிமலை தரிசனம் செய்ய முதலில் https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளத்தில் Register என்பதை கிளிக் செய்து தேவையான தகவல்களை உள்ளிடவும். இதில் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, புகைப்படத்துடன் கூட அடையாள அட்டை, முகவரி, மாநிலம், மாவட்டம், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும்.தகவல்களை சமர்ப்பித்ததும் அதில் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு ‘OTP’ அனுப்பப்படும்.
மீண்டும் இ-மெயில், பாஸ்வேர்ட் உள்ளிட்டு உள்நுழைந்து தரிசனம் செய்வதற்கான தேதி தேர்வு செய்து கொள்ளவும் மேலும் பிரசாதத்தில் அரவன, அப்பம், அபிஷேக நெய், விபூதி, மஞ்சள் மற்றும் குங்குமம் எத்தனை தேவை போன்ற விபரங்களை உள்ளிட்டு ஆன்லைன் டிக்கெட் புக் செய்துகொள்ளலாம் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.