நயன்தாரா – விக்னேஷ் சிவன் விதிமீறவில்லை: சுகாதார துறை அறிக்கை!

வாடகைத் தாய் விவகாரத்தில், நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி விதிமீறவில்லை என, தமிழக சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணமான நான்கு மாதங்களிலேயே, இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக, கடந்த 9 ஆம் தேதி, விக்னேஷ் சிவன் அறிவித்தார். இவர்கள் வாடகைத் தாய் வாயிலாக, குழந்தைகளை பெற்ற தகவல் வெளியானது.

வாடகைத் தாய் சட்டப்படி, திருமணமாகி ஐந்து ஆண்டுகள் வரை குழந்தைப்பேறு இல்லாதவர்கள்; தம்பதியரில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியான உடல்நிலை இல்லாத பட்சத்தில், உரிய விதிகளை பின்பற்றி, வாடகைத் தாய் அமைத்து குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், நயன்தாரா விவகாரத்தில் நான்கு மாதங்களிலேயே குழந்தை பெற்றது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, மருத்துவம் மற்றும் ஊரக சேவை நலப்பணிகள் இயக்க இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து, அறிக்கையை டி.எம்.எஸ்., இயக்க அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.

இன்று மாலை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

இவ்விசாரணையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஎம்ஆர்) செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.10.5-ன்படி வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளது.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு பதிவு திருமணம் 2016 மார்ச் 11 ஆம் தேதி நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தம்பதியர், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்த மருத்துவச்சான்று விசாரணைக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வாடகைத் தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் இச்சட்டத்திற்கு முந்தைய ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகைத்தாயாக செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின் போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த விசாரணையில் ஐசிஎம்ஆர் வழிகாட்டு முறைகளின்படி, மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால், இது குறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை. எனவே, மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.