தங்கக் கவச விவகாரம்: மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு அ.தி.மு.க சார்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்த வழக்கில் வருவாய்த்துறை அதிகாரி மூலம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தங்கக் கவசம் வைக்கப்பட்டுள்ள வங்கி

ஆண்டுதோறும் அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் விடுதலைப் போராட்ட வீரரும் ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவருமான முத்துராமாலிங்க தேவர் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நடைபெறும். இந்த விழாவில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்வார்கள்.

2014-ல் பசும்பொன் நினைவிடத்திலுள்ள தேவர் சிலைக்கு அ.தி.மு.க சார்பில் ரூ 3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை அன்பளிப்பாக ஜெயலலிதா அளித்தார்.

மதுரை அண்ணா நகர் பேங்க் ஆஃப் இந்தியா லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்கக் கவசத்தை ஆண்டுதோறும் 3 நாள்கள் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவுக்கு அ.தி.மு.க பொருளாளர் மூலம் பசும்பொன் தேவர் நினைவிடக் காப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்படும். மதுரையிலிருந்து பசும்பொன் கொண்டு செல்லப்பட்டு, விழா முடிந்தபின் மீண்டும் மதுரை வங்கி லாக்கரில் வைக்கப்படும்.

தங்கக் கவசம் ஜெயலலிதா அளித்தபோது

தற்போது அ.தி.மு.க-வில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் பிரிந்து செயல்பட்டு வருவதால், தங்கக் கவசத்துக்கு உரிமை கொண்டாடுவதில் இரண்டு தரப்பும் போட்டியிட்டு வந்தது. அ.தி.மு.க-வின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தவரை மதுரை வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு கவசத்தை பெற்று பின்னர் அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைத்து வந்தார்.

தற்போது கட்சிப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தங்கக் கவசத்தை ஒப்படைக்க வேண்டுமென்று எடப்பாடி அணியினரும், தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் அணியினரும் வங்கிக்கு கடிதம் கொடுத்தனர். இதனால் வங்கி நிர்வாகம் குழம்பிப் போனது

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எடப்பாடி அணியினர் வழக்கு தாக்கல் செய்ய, இரண்டு அணியினரும் தங்கக் கவசத்துக்கு உரிமை கொண்டாடி வாதங்களை வைத்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்படுவதாக சொல்லப்பட்டது.

இன்று காலையிலிருந்து இந்த வழக்கின் உத்தரவுக்காக இரண்டு அணியினரும் ஆவலுடன் காத்திருந்தனர். வங்கி அருகே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

வங்கி

இரு தரப்பு கோரிக்கையையும் விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சற்று முன்பு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தங்கக் கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இரண்டு அணியினரும் அப்செட்டாகியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.