சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்ததை தட்டிக்கேட்ட காவலரை இளைஞர்கள் சிலர் பொது இடத்திலேயே தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் அசோக். இவர் நேற்று முன்தினம் இரவு கன்னங்குறிச்சிக்கு சென்று இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது, சின்ன திருப்பதி என்ற பகுதியில், இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் எதிரே வேகமாக வந்துள்ளனர். இதனைப் பார்த்த அசோக் ஏன் இவ்வாறு விதியை மீறி மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் அவர்களுடன் வந்த மேலும் இருவரும் சேர்ந்து காவலர் அசோக்கை, சாலையிலேயே வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த காவலர் அசோக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும், ஒரு இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் காவலர் அசோக் பொது வெளியில் இளைஞர்களால் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.