காஷ்மீர் விவகாரம் பற்றி சீனா-பாக். கூட்டறிக்கை ஒன்றிய அரசு கண்டனம்

புதுடெல்லி:  ‘ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி,’ என தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, பாகிஸ்தான் – சீனா வெளியிட்டுள்ள கூட்டறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 2 நாள் பயணமாக சீனா சென்றபோது, சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஜம்மு காஷ்மீர் குறித்து இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘‘ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் – சீனா வெளியிட்ட கூட்டறிக்கையை ஒன்றிய அரசு நிராகரிக்கிறது.

இவை தேவையற்ற குறிப்புகள். இந்தியா இதனை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக எப்போதும் இருக்கும். இந்தியாவின் இறையாண்மை பிரதேசத்தில் சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டங்களை அமல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்புக்களையும், கவலையையும் தொடர்ந்து தெரிவிக்கிறது. அந்த பகுதியில் உள்ள நிலையை மாற்றுவதற்கு இது போன்ற திட்டங்களை பயன்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் உறுதியாக நிராகரிக்கிறோம்,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.