கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஆறு இடங்கள் தவிர 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அனுமதி வழங்காததால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நவம்பர் 6ம் தேதி அணிவகுப்பு அனுமதியளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கடலூர், பெரம்பலூர் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்த உளவுத்துறை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பார்த்த பிறகு உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதி, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உளவுத்துறை அறிக்கையை ஆய்வு செய்ததில் 2007, 2008ஆம் ஆண்டுளில் பதிவான வழக்குகளைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், அதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
பின்னர், உளவுத்துறை அறிக்கையில் பதட்டம் நிறைந்த பகுதிகளாக சுட்டிக்காட்டப்பட்ட கோவை, பொள்ளாச்சி, மேட்டுபாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய 6 இடங்களை தவிர மற்ற இடங்களில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்க உத்தரவிட்ட நீதிபதி, மீதமுள்ள ஆறு இடங்களில் இயல்புநிலை திரும்பிய பின், அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி புதிதாக காவல்துறையிடம் புதிதாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெளிவுபடுத்தி உள்ளார்.
மேலும் அணிவகுப்பு ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது எனவும், மீறி நடந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறித்தி உள்ளார்.